'ஓரளவு படித்த, மாதச் சம்பளம் வாங்குகிற பெரும்பாலான நடுத்தர மக்கள் அவசியம் ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியாவது எடுத்திருப்பார்கள். ஆயுள் இன்ஷூரன்ஸ், விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, வாகனக் காப்பீடு என்று என்று ஏதோ ஒன்று. ஆனால் பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் எடுப்போருக்கு, அதன் சூட்சுமங்கள் ஏதும் தெரியாது. இத்தனை பணம் போட்டால், இத்தனை காலத்துக்குப் பிறகு இவ்வளவு கிடைக்கும் என்கிற மேலோட்டமான புள்ளிவிவரம் மட்டுமே ஏஜெண்டுகளால் தரப்பட்டிருக்கும். கோடிக்கணக்கான மக்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள். அத்தனை பேருக்கும் காப்பீட்டு நிறுவனம் எப்படி அவ்வளவு பணத்தைத் தரமுடியும்? எத்தனை எத்தனை பேர் இன்ஷூரன்ஸ் பணம் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் எத்தனை பேர் வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? நிதி நிறுவனங்களைப் போல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏமாற்று நிறுவனங்கள் அல்ல. ஆனால் நாம் நம்மையறியாமல் செய்யும் சிறு பிழைகள் கூட நமது பணம் கிடைக்காமல் செய்துவிடும். இன்ஷூரன்ஸ் குறித்த அடிப்படை விவரங்களை மிக எளிமையாக விளக்குகிறது இந்நூல். ஒரு பாலிசி எடுப்பதற்கு முன் எந்தெந்த வகையில் நாம் தயாராக வேண்டும், என்னென்ன விவரங்களைத் தரவேண்டும், எதையெதையெல்லாம் கவனமாக முன்கூட்டியே பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பது போலச் சொல்லித்தருகிறார் நூலாசிரியர் ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி. எல்.ஐ.சி.யின் சேர்மனாக இருந்து ஓய்வு பெற்றவர் இவர். தமது பல்லாண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதியுள்ள நூல் இது! '