வியாபாரம் செய்யப்போகிறேன் என்று தனது பத்தொன்பது வயதில் சுபாஷ் சந்திரா தீர்மானமாக அறிவித்தபோது ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டது உலகம். வியாபாரம் என்பது சாமானியமான காரியமா? போட்டி, பொறாமை, சச்சரவுகள், இழப்புகள் அனைத்தையும் தாண்டி மீண்டு வருவது என்றால் சும்மாவா? மீண்டு வருவது அல்ல என் நோக்கம்; சாட்டிலைட் உலகில் என் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கப்போகிறேன் என்றார் சுபாஷ் சந்திரா. கனவு, திடம் இரண்டை மட்டுமே முதலீடு செய்து தன் கனவு சாம்ராஜ்யத்துக்கான முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். இவர் செய்தது மேஜிக்கா அல்லது மேனேஜ்மெண்ட் தந்திரமா என்று தெரியாமல் அனைவரும் விழித்து நின்றபோது அவர்கள் கண் முன்னால் தன் சாட்டிலைட் உலகைப் படிப்படியாகக் கட்டி முடித்தார் சுபாஷ் சந்திரா. இந்திய சாட்டிலைட் சானல் நிறுவனத்தின் முதல் அத்தியாயம் ஜீ டிவி. போட்டியாகக் களம் இறங்கிய ஸ்டார் டிவியையும் அதன் நிறுவனர் ராபர்ட் முர்டாக்கையும் சுபாஷ் சந்திரா தன்னந்தனி ஆளாகச் சமாளித்தது இன்றுவரைக்கும் பரபரப்பாகப் பேசப்படும் கதை. சுபாஷ் சந்திராவுக்கு ஒவ்வொரு பிரச்னையும் ஒரு சவால். ஒவ்வொன்றையும் வரவேற்று முறியடிக்க அவர் கடைபிடித்த உத்திகள் அனைத்தும் வியாபார உலகின் நிரந்தர வெற்றி மாடல்கள்.