தூக்கத்தில் ஒருவர் கண்ட கனவுக்கு, ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைக்கும் சக்தி இருக்குமா? உள்ளம் கொதிகொதிக்க ஒரு பெண்மணி என்றோ விட்ட சாபம், இன்றுவரை ராஜ பரம்பரையினரைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மையா? ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூரை வாழ்விக்க வந்த ரட்சகர்களா? அல்லது உடையார் பரம்பரையினரை ஒடுக்கி வைத்த வில்லன்களா? உடையார் பரம்பரை ஆட்சிக்கு வந்த புராதன கதை முதல் மைசூரின் பாரம்பரிய அடையாளமாக மிஞ்சிக்கிடக்கும் தசரா உற்சவத்தின் இன்றைய வரலாறு வரை அத்தனையும் இந்தப் புத்தகத்தில் உண்டு. விஜயநகரப் பேரரசர்கள் முதல் விஸ்வேஸ்வரய்யா வரை புத்தகத்தில்வாழும் சரித்திர நாயகர்கள் அநேகம். ஐந்தரை நூற்றாண்டு காலம் உடையார்கள் மைசூரை ஆட்சி செய்த மொத்த சரித்திரத்தையும் உணரும் போது நமக்குள் தோன்றும் ஒரே உணர்வு பிரமிப்பு! காதல், மோதல், வீரம், கோபம், சோகம், துவேஷம், இன்பம் அனைத்து ரசங்களோடும் மைசூர் அரண்மனைக்குள் வாழும் உணர்வினைத் தருகிறார் நூலாசிரியர்.